செங்குன்றம் அருகே சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி, தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை, மகன் படுகாயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர், நேதாஜி சாலையை சேர்ந்தவர்கள் ஜெயவேல் (52) -உஷாராணி (48) தம்பதியினர். இவர்களுக்கு சாய் மோகித் (4), சாய் மோனிஷா (4) ஆகிய இரு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் , சென்னை -சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உஷாராணியின் பெற்றோர் வீட்டுக்கு, இன்று மதியம் வாடகை கார் ஒன்றில், ஜெயவேல் - உஷாராணி தம்பதியினர், தங்கள் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில், செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த உஷாராணி, சாய் மோனிஷா மற்றும் வாடகை கார் ஓட்டுநர் மணீஸ் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; ஜெயவேல், சாய் மோகித் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், படுகாயமடைந்த ஜெயவேல், சாய் மோகித் ஆகிய இருவரை மீட்டு, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE