எருக்கம்பால் ஊற்றி பெண் சிசுவை கொலை செய்த பெற்றோர் கைது @ வேலூர்

By KU BUREAU

வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் ஊற்றி பெண் சிசுவை கொலை செய்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சி பொம்மன்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா என்கிற சேட்டு (30). இவரது மனைவி டயானா (25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், 2-வது முறையாக கர்ப்பமடைந்தார் டயானா.

கடந்த மாதம் 27-ம் தேதி டயானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு டயானாவுக்கு ரத்த அளவு குறைவாக காணப்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை முடிந்து தாயும், சேயும் கடந்த புதன்கிழமை காலை வீடு திரும்பினர்.

இதற்கிடையில், வீடு திரும்பிய நிலையில் முதல் பெண் பிள்ளை விளையாட்டாக பச்சிளம் பெண் குழந்தையை போர்வையால் அமுக்கியதில் இறந்துவிட்டதாக டயானா தனது பெற்றோரிடம் கைபேசியில் கடந்த புதன்கிழமை கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி யடைந்த டயானாவின் பெற்றோர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அதற்குள் ஜீவா, டயானா தம்பதியினர் பச்சிளம் பெண் குழந்தையின் உடலை புதைத்துவிட்டனர். உடனடியாக டயானாவின் தந்தை சரவணன், பச்சிளம் குழந்தையின் சந்தேக மரணம் குறித்து தனது மகள், மரு மகன் மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், காவலர்கள் விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் ஜீவா, டயானா தம்பதியினர் மாயமாகினர். மேலும், பச்சிளம் பெண் குழந்தையின் உடலை தோண்டி யெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜீவா, டயனா ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை வேண்டாம் என்பதால் எருக்கம் பாலை ஊற்றி கொலை செய்த தாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம், தொடர்ந்து விசா ரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE