கோவையில் அதிர்ச்சி... மிருகமாய் மாறிய அப்பா... 2 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான துயரம்!

By காமதேனு

கோவையைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் தனது 2 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த 29 வயது மருத்துவ பிரதிநிதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்தப் பெண் குழந்தை நீண்டநேரமாக அழுது கொண்டே இருந்ததைப் பார்த்த தாய், குழந்தையிடம் பசிக்கிறதா, சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை ஆட்டியபடியே தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தது. இதையடுத்து அந்த தாய், குழந்தையைப் பரிசோதனை செய்த போது குழந்தைக்கு காயம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பெற்ற குழந்தையையே கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் செயல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE