குடும்பத் தகராறில் உறவினர் குத்திக் கொலை: கரூரில் பெயின்டர் தலைமறைவு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் குடும்பத் தகராறில் உறவினர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தலைமறைவான பெயின்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் ராயனூர் தில்லை நகரை சேர்ந்தவர் வீரமலை (32). பெயின்டரான இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் புனிதாவை ஊருக்கு அழைத்து செல்வதற்காக புனிதாவின் தந்தை பழனிசாமி (52) நஞ்சை காளக்குறிச்சியைச் சேர்ந்த அவரது மனைவியின் சகோதரி மகன் கபில்தேவுடன் (23) இன்று (செப். 4ம் தேதி) கரூர் வந்து குழந்தையுடன் புனிதாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக 4 பேரும் திருமாநிலையூர் பேருந்து நிறுத்தத்தில் மதியம் 12.20 மணிக்கு நின்றுள்ளனர்.

அப்போது, அங்கு வந்த வீரமலை எப்படி தன் மனைவியை ஊருக்கு அழைத்து செல்லலாம் எனக் கூறி பழனிசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சண்டையை தடுத்த கபில்தேவை, வீரமலை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த கபில்தேவை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் 1.52 மணிக்கு உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வீரமலையை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE