பாகிஸ்தானில் இந்து கோவில்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்; அச்சத்தில் சிறுபான்மையினர்

By காமதேனு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தொடரும், இந்துக் கோவில்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலால் அங்கே சிறுபான்மையினரான இந்துக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள இந்து கோயில் ஒன்றும் அதனையொட்டி இந்துக்கள் வசிக்கும் வீடுகளும் பயங்கரவாதிகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு ஆளாயின. ஞாயிறு அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கோயில் பெருமளவு சேதத்துக்கு ஆளானது. பயங்கரவாதிகள் வருகையை அடுத்து மக்கள் மறைவிடத்துக்கு சென்றதால், மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால், இருதரப்பு மதத்தினர் இடையே இணக்கத்தை குலைக்கும் வகையிலும், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் சேர்க்கும் வகையிலும் திட்டமிட்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக, சிந்து மாகாணத்தின் அரசியல் மற்றும் ஆட்சியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் மேலும் தொடரும் என்ற அச்சம் நிலவுவதால், சிந்து மாகாணத்தின் காவல்துறை தலைவர் குலாம் நபி மெமோன் உத்தரவின் பெயரில், சுமார் 400 காவலர்கள் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அடுத்து வரும் 2 மாதங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு பணி தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

போலீஸாரின் பாதுகாப்பு பணிகளுக்கு அப்பகுதி வாழ் இந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். கோவில் மீதான ஏவுகணை தாக்குதல் தொடர்பாக, அடையாளம் அறியப்படாத நபர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE