செங்குன்றம் | சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அரபி மொழி ஆசிரியர் கைது

By KU BUREAU

செங்குன்றம்: செங்குன்றம் அருகே சோழவரம் பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரபி மொழி ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த காரனோடை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆஸிப் (32).

அரபி மொழி ஆசிரியரான இவர், சோழவரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், சிறுமிகளுக்கு அரபி மொழி கற்றுக் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், முகமது ஆஸிப், பள்ளிவாசலில் அரபி மொழி கற்றுவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு உதவிக்கான தொலைபேசி எண்களுக்கு சமீபத்தில் புகார் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு நேரில் சென்று சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், அரபி மொழி பயின்று வரும் 20 சிறுமிகளுக்கு முகமது ஆஸிப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், முகமது ஆஸிப், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், அரபிமொழி ஆசிரியர் முகமது ஆஸிப்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE