கார் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு: நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் கைது

By KU BUREAU

சென்னை: மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர்மஞ்சன் (55). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு, வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு சந்திப்பில் சாலையோரத்தில் படுத்துத் தூங்கினார்.

அப்போது அந்த வழியாக வந்தகார் எதிர்பாராத விதமாக மஞ்சன்மீது ஏறி இறங்கியது. இதில் பலத்தகாயமடைந்த மஞ்சனை அங்கிருந்தவர்கள் மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மஞ்சன், சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், விபத்தை ஏற்படுத்தியது, சென்னை எம்ஜிஆர் நகர், டி.வி.கே. தெருவைச் சேர்ந்த பாண்டி (25) என்பதும், இவர் பிரபலதிரைப்பட நடிகை ரேகா நாயரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவதும், அந்த நடிகையின் பெயரிலேயே கார் இருப்பதும் தெரியவந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக பாண்டி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE