அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

By காமதேனு

கோவை அருகே அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானையை காரில் துரத்திய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, அதிமுக பிரமுகருக்கு வனத்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, பாதுகாக்கப்பட்ட பகுதியான ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிலர் கட்டுப்பாடுகளை மீறி நள்ளிரவில் வனப்பகுதிக்குள் வலம் வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மிதுன் என்பவர், தனது செல்போனில் வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அதில் ஹைபீம் விளக்குகளை ஒளிரவிட்டபடி வனப்பகுதிக்குள் அவர் பயணிப்பதும், அவர் முன்னாள் நின்றிருந்த யானை ஒன்றை அவர் விரட்டியதும் தெரியவந்தது.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணியுடன் மிதுன்

ஹைபீம் விளக்குகள் மற்றும் காரின் சத்தம் காரணமாக அந்த யானை பீதியில் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில் ஓடியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியது அடுத்து வன உயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, இந்த சம்பவம் புலிகள் காப்பக பகுதியான நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE