பணகுடி கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பணகுடி, செம்புலிங்கபுரத்தை சேர்ந்த சுந்தரம் மகன் பெருமாள் என்ற வெள்ளி கண்ணன் (67) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

ஆனால் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் கடந்த 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரான தங்கராஜ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மற்றொரு நபரான இசக்கியம்மாள் என்பவர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டார்.

பெருமாளை கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பெருமாளை தேடி வந்தனர்.

அவர் சென்னை, கோவை, பல்லடம், கஞ்சம்பட்டி பகுதிகளில் தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் வள்ளியூர் பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில், தனிப்படை போலீஸார் பெருமாளை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE