நண்பரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது @ கள்ளக்குறிச்சி

By KU BUREAU

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த காட்டுக்கொட்டகைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், சின்னசேலம் போயர் தெருவைச் சேர்ந்த முத்தையன் (42) என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட, இருவரும் நண்பர்கள் ஆயினர்.

அந்த இளைஞரிடம் நெருங்கிப் பழகிய முத்தையன், அவரிடம் இருந்து 50 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. புதிதாக வாங்கிய இடத்தில் கொட்டகை அமைத்து, அப்பகுதி மக்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த முத்தையன், அவரது மனைவியுடனும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த இளைஞர் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த நபரின் மனைவி முத்தையனுடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, தான் விற்பனை செய்த நிலத்தை, மீண்டும் தனக்கே விற்று விட்டு, இடத்தை அங்கிருந்து காலி செய்யுமாறு அந்த இளைஞர் கூற, இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிலத்தை தர மறுத்த முத்தையன், கடந்த வாரம் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவியோடு தகராறில் ஈடுபட்டு, தாக்கியதாக தெரிகிறது. மேலும் அந்தப் பெண்ணை தன்னுடன் வர வேண்டும் என்றும், வராவிட்டால் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் புகார் அளித்தார். விசாரணைநடத்திய போலீஸார், முத்தையனை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE