தம்பியை கொலை செய்தவர் வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம்: முகநூலில் பதிவிட்ட ஊராட்சி தலைவரின் கணவர் கைது

By இரா.நாகராஜன்

செங்குன்றம்: செங்குன்றம் அருகே தனது தம்பியின் கொலைக்கு காரணமானவர் வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம் என முகநூலில் பதிவிட்ட ஊராட்சி தலைவரின் கணவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரான இவர், அதிமுக ஜெயலலிதா பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பார்த்திபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி பாடியநல்லூரில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, கும்பல் ஒன்றால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாடியநல்லூர் - சோலையம்மன் நகரைச் சேர்ந்த முத்துசரவணன் (35), ஞாயிறு பகுதியைச் சேர்ந்த சண்டே சதீஷ் (32) ஆகிய இரண்டு ரவுடிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சோழவரம் அருகே மாரம்பேடு பகுதியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பார்த்திபன் கொலை சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில் பார்த்திபனின் அண்ணன் நடராஜன், ‘தம்பியின் கொலைக்கு காரணமான துரோகி வீட்டில் கவுண்ட் டவுன் ஆரம்பம்’ என்ற வாசகத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக விசாரித்த செங்குன்றம் போலீஸார், பார்த்திபன் கொலை தொடர்பாக முகநூல் பக்கத்தில், மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக தகவல் தொழிநுட்பச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ், நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பார்த்திபனின் அண்ணனும், பாடியநல்லூர் ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமியின் கணவருமான நடராஜனை (58) சனிக்கிழமை இரவு செங்குன்றம் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE