அமெரிக்க வாழ் இந்தியரிடம் 15 லட்சம் மோசடி: நடிகை மகாலட்சுமியின் கணவர் மீது போலீஸில் புகார்

By காமதேனு

பிரபல சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக்நகர் 12-வது அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர். லிப்ரா புரொடக்‌ஷன் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்ன தெரியுமா, நளனும் நந்தினியும் போன்ற படங்களை தயாரித்துள்ளார். ரவீந்தர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமடைந்தார். இந்தநிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது சென்னை அண்ணாநகரை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கிளப் ஹவுஸ் என்ற சமூக வலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, ரவீந்தர் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தர வேண்டும் எனக்கூறி என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். அதற்கு நான் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி ரவீந்தரின் லிப்ரா புரொடக்‌ஷன் வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாய் அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் அதே ஆண்டு மே மாதம் 25-ம் தேதி 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார்.

ஆனால், ரவீந்தர் சொன்னது போல் பணத்தை திருப்பி தரவில்லை, பணம் குறத்து அவரிடம் கேட்டபோது தொடர்ந்து அலை கழித்து, அவதூறாக பேசியதுடன், ஒரு கட்டத்தில் எனது செல்போன் எண்ணை ரவீந்தர் பிளாக் செய்துவிட்டார். மேலும் ஆன்லைன் மூலம் ரவீந்திர் சந்திரசேகர் பணம் கேட்டதற்கான ஆதாரம், பணம் கேட்டு அவர் பேசிய ஆடியோ உள்ளி ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் கூறுகையில், "விஜய்க்கு பணம் தர ஒப்புக்கொண்டு செக் அனுப்புவதாக தெரிவித்துள்ளேன். ஆகவே விஜய்யும், நானும் சமாதானமாக செல்ல உள்ளேன். விஜய் புகாரை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" என்றார்.

வாங்கிய கடனை திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்த சினிமா தயாரிப்பாளர் காவல்துறையில் புகார் அளித்தவுடன் பதறி அடித்துக்கொண்டு பணத்தை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE