மதுரை அருகே கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2001 - 2006-ம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரில் வசித்து வரும் இவருக்கும், அந்த ஊர் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகனுக்கும் இடையே பாறை கருப்புசுவாமி கோயிலில் முதல் மரியாதை பெறுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் பொன்னம்பலத்தின் வீடு சூறையாடப்பட்டு அவருக்கு சொந்தமான கார் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வேல்முருகன் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். மேலும் வேல்முருகனின் புகாரின் பேரில், முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தையும் அவரது மகன்களையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கருவனூரில் உள்ள பொன்னம்பலத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் கதவை உடைத்து அங்கிருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொன்னம்பலம் மனைவி பழனியம்மாள் சத்திரபட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.