பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் கைது: நத்தம் போலீஸார் அதிரடி

By பி.டி.ரவிச்சந்திரன்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(30). இவர், புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவர் ஆகஸ்ட் 17ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது நண்பர்கள் இவருக்காக பெரிய அளவிலான கேக் வாங்கி வந்து பிறந்தநாளை கொண்டாடச் செய்துள்ளனர். தனது வீட்டின் அருகே இரவில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஜா பட்டாக்கத்தியால் கேக் வெட்டினார்.

இந்த நிகழ்வை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக நத்தம் போலீஸார், ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE