10ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; சாலையோரம் வீசப்பட்ட கொடூரம்

By KU BUREAU

அசாம்: நாகோன் மாவட்டத்தில் நேற்று மாலை 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நாகோனில் 10 வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, நேற்று மாலை ஒரு குளத்திற்கு அருகில் அரை மயக்க நிலையில் தனது சைக்கிளுடன் கிடந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் சாலையோரம் கிடந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமி பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், "சிறுமி சாலையோரம் சைக்கிளுடன் கீழே விழுந்து கிடந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தபோது, அவரால் சரியாக பேச முடியவில்லை. ஆனால் மூன்று இளைஞர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்வதற்கான மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து நாகோனில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் 12 மணி நேரத்திற்குள் போலீஸார் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகள், சந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வணிகர்கள்,"இது ஒரு கொடூரமான சம்பவம். குற்றவாளிகளை உடனடியாக போலீஸார் பிடிக்க வேண்டும். காவல்துறையின் செயலற்ற தன்மையை கண்டித்து பந்த் நடத்துகிறோம். குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் வரை இது தொடரும்" என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE