தரகரை கடத்தி ரூ.2 லட்சம் பணம் பறிக்க முயற்சி: திருப்பூரில் 3 போலீஸார் உட்பட 6 பேர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த தரகரை கடத்தி தாக்கி ரூ. 2 லட்சம் கேட்டதாக கூறி 3 காவலர்கள் உள்பட 6 பேரை திருப்பூர் நல்லூர் போலீஸார் இன்று (ஆக. 22) கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கோவில்வழியை சேர்ந்த 26 வயது பெண், நல்லூர் போலீஸாரிடம் 2 நாட்களுக்கு முன்பு தனது கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பெருமாநல்லூர் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபர் அங்கிருந்து தப்பித்து தனது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கடத்தப்பட்ட நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மேலும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33) மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலா சோலூர் மட்ட காவலர் லட்சுமணன் (32), இவர்களின் நண்பர்களான ஜெயராம் (20), ஹரீஸ் (25) மற்றும் அருண்குமார் (24) ஆகிய 6 பேரை போலீஸார் பெருமாநல்லூரில் வைத்து கைது செய்தனர்.

போலீஸார் மூவரும் 2011ம் ஆண்டு காவலர் பணிக்கு சேர்ந்துள்ளனர். இவர்கள், இணையம் மூலம் நடந்து வரும் பாலியல் தொழிலை கண்காணித்து பணம் பறிக்க திட்டமிட்டதும், இதற்காக திருப்பூர் கோயில்வழியை சேர்ந்த பாலியல் தரகரை கடத்தி பணம் பறிக்க முயன்றதும் போலீஸாரின் தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE