வியாசர்பாடியில் 17 வழக்குகளில் சிக்கிய ரவுடி படுகொலை: போலீஸார் தீவிர விசாரணை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 13வது தெருவில் வசித்து வந்தவர் ஆசைத்தம்பி (35). இவர் மீது எம் கே பி நகர், செங்குன்றம், செம்பியம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சுமார் 17 குற்ற வழக்குகள் உள்ளன.

இவர் வியாசர்பாடி பி.வி காலனி 18வது தெருவில் வசிக்கும் விமலா (50) என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். நேற்று இரவு 10 மணியளவில் இவர் விமலா வீட்டில் இருந்தபோது ஐந்து நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஆசைத் தம்பியை பீர் பாட்டில் மற்றும் கடப்பா கல்லால் சரமாரியாக தாக்கி கடப்பா கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளனர்.

அப்போது விமலா அருகில் இருந்த தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தாக கூறப்படுகிறது. மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஆசைத்தம்பி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். சுமார் 3 மணி நேரம் கழித்து இரவு ஒரு மணி அளவில் விமலா இது குறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

எம் கே பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசைத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விமலா மற்றும் அவரது அண்ணன் சிவக்குமார் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து பேர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எம்கேபி. நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE