சென்னையில் ஒரே வாரத்தில் 26 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

By KU BUREAU

சென்னை: சென்னையில் குற்றங்களை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, நகை பறிப்பு, சைபர் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 468 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 பேரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 193 பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

கடந்த 12-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரையிலான 7 நாட்களில் மட்டும் 26 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE