அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!

By காமதேனு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மணப்பாறையை அடுத்த ப. குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜரெத்தினம், மணப்பாறை அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலெட்சுமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதையடுத்து மகன் சஞ்சீவ் (18), மகள் மணிமேகலை (15) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்றிருந்த சீத்தப்பட்டியை சேர்ந்த கலையரசி என்பவரை ராஜரெத்தினம் மறுமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தில் சகோதரன் மற்றும் சித்தியிடம் கருத்து வேறுபாடு இருந்ததால் மகள் மணிமேகலை திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம் சகோதரன், சித்தி ஆகியோருக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சரஸ்வதி பூஜை விடுமுறையை ஒட்டி வீட்டுக்கு வந்திருந்த மணிமேகலை, நேற்று காலை வீட்டிலிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார் மணிமேகலையின் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் மர்மச்சாவு குறித்து அவரது தாத்தா பேயக்கவுண்டா் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE