திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கழுத்தறுத்துக் கொலை: போலீஸார் விசாரணை

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொலை செய்தவர்கள், அவரது நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன் ( 50). இவரது மனைவி பிரபாவதி ( 40). இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரபாவதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை பிரபாவதி வெகு நேரமாகியும், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது.

இதையறிந்த, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், வீட்டுக்குள் சென்று பார்த்த போது பிரபாவதி ரத்த வெள்ளத்தில் ஆடைகள் இன்றி சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், பிரபாவதியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பிரபாவதி தலையில் கத்திக் குத்துப்பட்டும் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்களை கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்கள் பிரபாவதியின் நகைகளை கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாது அவரை பாலியல் வன்கொடுமையும் செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், சம்பவ நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டதுடன், கொலையாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான நான்கு தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழப்பு செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பிரபாவதி குடும்பத்தினருக்கும், பிரபாவதி கணவர் நாகநாதன் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE