கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

By காமதேனு

குமரியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மருத்துவ மாணவி விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரி. இவருடைய மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் முதுநிலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த இவர் நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் அவரது தோழிகள் அவரை தேடி விடுதி அறைக்கு சென்றனர்.

அங்கு சுகிர்தா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே மருத்துவர்களுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். மருத்துவர்கள் விரைந்து வந்து சுகிர்தாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து சுகிர்தாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கல்லூரி விடுதியில் மாணவியின் அறையில் போலீஸார் நடத்திய சோதனையில் ஊசி மற்றும் மருந்து சிக்கியது. மாணவிக்கு சொந்தமான மடிக்கணினியையும், செல்போனையும் கைப்பற்றினர்.

மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து மாணவி எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சுகிர்தாவுடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார் வருவாய் ஆய்வாளர் அமுதா சார்பிலும் கல்லூரியில் விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக குலசேகரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE