பல்லடம் அருகே பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை: போலீஸ் விசாரணை

By இரா.கார்த்திகேயன்

பல்லடம்: பல்லடம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் உடையான் குளத்தை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (35). பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் உள்ள பேக்கரில் வேலை செய்து வந்தார். இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று (ஆக.8) கரையாம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்தபோது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வினோத் கண்ணனை ஆயுதங்கள் மற்றும் அரிவாள் கொண்டு சுற்றி வளைத்தது.

அப்போது தப்ப முயன்ற வினோத் கண்ணன், பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த சந்துக்குள் புகுந்தவரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதில் வினோத் கண்ணன் தலை துண்டானாது. இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த கொலை பழிக்கு, பழி சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும், ஏற்கனவே வினோத் கண்ணன் நண்பர்கள் சிலர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE