ராணி மேரி கல்லூரி அருகே கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரி அருகே கார் மோதியதில் சாலை நடுவே அமர்ந்து இருந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் வீரமணி (36). கால் டாக்ஸி ஓட்டுநரான இவர் இன்று அதிகாலை முட்டுக்காடு பகுதியில் 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவரது கார் மெரினா காமராஜர் சாலை, ராணி மேரி கல்லூரி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, சாலை நடுவே ஒருவர் அமர்ந்து இருந்துள்ளார். இதை கவனிக்காமல் சென்ற வீரமணியின் கார் அந்த நபர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து ஓட்டுநர் வீரமணியை கைது செய்தனர். விபத்தில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக சாலையில் நடுவே அமர்ந்திருந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE