நெல்லை அருகே ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது!

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: நெல்லை அருகே ரூ.75 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கியது. காரில் கள்ளநோட்டுகளுடன் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீஸார் தாழைகுளம் விலக்கு அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த பொலிரோ கார் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனை அடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார், காரை சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.75 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் கள்ள நோட்டுகளுடன் வந்த சிவகாசியைச் சார்ந்த சீமைசாமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவிலைச் சார்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேர் மீது மூன்றடைப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டுக்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE