பாளையங்கோட்டை கல்லூரியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாரிச்செல்வம் (20) என்பவர் 2-ம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் படிப்பதற்காக பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று கல்லூரியில் உணவு இடைவேளையின் போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளது.

இதில் காயமடைந்த மாரிசெல்வம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வி.எம்.சத்திரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாய கோயில் கொடை விழா சமீபத்தில் நடைபெற்றது. அதையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

அப்போது மற்றொரு சமுதாய இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் குறுக்காக சென்றதாக தெரிகிறது. இதை மாரிச்செல்வம் கண்டித்துள்ளார். இந்த முன்விரோதத்தில் அவர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய 4 பேரில் ஒருவர் இதே கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE