நெல்லை: பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் வெறிச்செயல்!

By KU BUREAU

நாங்குநேரி: திருநெல்வேலியில் நாங்குநேரியில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், புத்தக பையில் அரிவாளை மறைத்து எடுத்து வந்து சக மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் கடற்கரை தளத்தில் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இன்று திடீரென பள்ளி வளாகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஒரு மாணவர் மற்றொரு மாணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக படுகாயம் அடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முதற்கட்ட விசாரணையில், 9ம் வகுப்பில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றியதாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் புத்தகப்பையில் மறைத்து வைத்து அரிவாளை எடுத்து வந்து, இன்று மாணவரை சக மாணவரே வெட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE