அதிகாலையில் சோகம்.. லாரி மோதி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் பலி!

By KU BUREAU

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுக் கொண்டிருந்த பக்தர்கள் 3 பேர் சாத்தூர் அருகே இன்று காலை சென்றுக் கொண்டிருந்த போது லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வழிபட்டு செல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடிவெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

இன்று அதிகாலை சாத்தூர் அருகே நல்லி பகுதியில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, நெல்லையில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி பாதயாத்திரையாக சென்றுக் கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மகேஸ், (35) பவுன்ராஜ் (45) முருகன் (45) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் தாலுகா போலீஸார், விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சிமெண்ட் லாரி ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE