சென்னையில் அதிர்ச்சி: போலி நகைகளைக் கொடுத்து மளிகைக் கடைக்காரரிடம் ரூ.5 லட்சம் மோசடி!

By பெ.ஜேம்ஸ் குமார்

குரோம்பேட்டை: சென்னை அருகே போலி நகைகளை கொடுத்து மளிகைக்காரரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவில் குமாரசாமி (59) என்பவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இவர் கடைக்கு முன்பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் வந்து பொருட்களை வாங்கி உள்ளார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து சில்லறை எடுப்பது போல் ஒரு சில வெள்ளி நாணயங்களை குமாரசாமியிடம் காண்பித்துள்ளார். அது குறித்து கேட்ட போது, தனது பெயர் கிஷோர் எனவும், கூலி வேலை செய்யும் இடத்தில் பள்ளம் தோண்டும் போது சில வெள்ளி நாணயங்கள், தங்க நகைகள் ஆகியவை தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பெண்ணின் திருமண தேவைக்காக, சிறிது நகைகளை விற்பனை செய்ய உள்ளதாகவும், தேவையென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி தனது மொபைல் எண்ணை கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் மீண்டும் கடைக்கு வந்த கிஷோர், தன்னிடம் இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை கொடுத்து, நீங்கள் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதைப் பெற்ற குமாரசாமி அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று பரிசோதித்து பார்த்த போது, அது உண்மையான நகை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து நம்பிக்கை ஏற்பட்டதால், கிஷோரிடமிருந்து மேலும் நகைகளை வாங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தனது உறவினரான புனிதா என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, தனது பணம் இரண்டரை லட்சம் சேர்த்து மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து நகைகளை வாங்க அவர் முடிவு செய்தார்.

இது தொடர்பாக கிஷோரை தொடர்பு கொண்ட போது, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து நகைகளை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து குமாரசாமி அவரது மனைவி மற்றும் உறவினர் புனிதா ஆகியோர் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று கிஷோரிடம் பணத்தை கொடுத்து தங்கச் சங்கிலிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குமாரசாமி, அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று அந்த தங்கச் சங்கிலிகளை பரிசோதித்த போது, அவை போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரசாமி, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE