சென்னையில் ஒரு வாரத்தில் 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

By KU BUREAU

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 16 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜன.1 முதல் ஜூலை 28 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் - ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்டதாக 422 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 130 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்தாக 178 பேர், குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 29 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாக 5 பேர் உட்பட மொத்தம் 796 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் மட்டும் 16 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையர் அருண் கூறுகையில், ``பொது மக்களின் நலனே முக்கியம். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE