பெற்றோர் கண் முன் சிறுமி உயிரிழப்பு: செல்போனுக்கு சார்ஜ் போடும் போது விபரீதம்

By KU BUREAU

கம்மம்: செல்போனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கி 9 வயது சிறுமி, பெற்றோர் முன்னிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள சிந்தகனி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி கார்த்திகா(9). இவர் வீட்டில் நேற்று இரவு செல்போனில் பாடலை ஒலிக்க வைத்து நடனமாடிக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனின் சார்ஜ் தீர்த்து போனது. இதனால் செல்போனுக்கு அஞ்சலி சார்ஜ் போடச் சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அஞ்சலி கார்த்திகா மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து பதறிப்போன அவரது பெற்றோர், உடனடியாக அஞ்சலியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரமான கைகளுடன் சிறுமி, சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் முன்பு நடனமாடிக் கொண்டிருந்த சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE