'ஸ்பைடர்மேன்' போன்று உடையணிந்து சாலையில் போக்குவரத்து விதிமீறல்: இளைஞர் கைது

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி, துவாரகா பகுதியில் 'ஸ்பைடர்மேன்' போன்று உடை அணிந்த 20 வயது இளைஞர், ஸ்கார்பியோ காரின் பானட்டில் நின்று கொண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி, துவாரகா பகுதியில் 20 வயது இளைஞர் ஒருவர், 'ஸ்பைடர்மேன்' உடையணிந்து, ஸ்கார்பியோ காரின் பானெட்டில் நின்று கொண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார். இதனை கண்ட பொதுமக்களில் ஒருவர், இது குறித்து டெல்லி காவல் துறைக்கு எக்ஸ் தளத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டி வந்த மற்றொரு இளைஞர் ஆகிய இருவரையும் பிடித்தனர்.

விசாரணையில் ஸ்பைடர்மேன் உடையணிந்தவர் ஆதித்யா (20) என்பதும், காரை ஓட்டி வந்தவர் கவுரவ் சிங் (19) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஆதித்யாவை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆபத்தாக வாகனம் ஓட்டுதல், மாசு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் 'சீட் பெல்ட்' அணியாமல் வாகனம் ஓட்டுதல் ஆகிய காரணங்களுக்காக இருவருக்கும் அதிகபட்சமாக ரூ.26,000 அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE