பெண்கள் விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொலை: மர்மநபரால் பெங்களூருவில் பரபரப்பு

By KU BUREAU

பெங்களூரு: பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரைச் சேர்ந்தவர் கிருதி குமாரி(24). இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதற்காக பெங்களூருவின் கோரமங்களாவில் உள்ள விஆர் லே அவுட்டில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பெண்கள் தங்கும் விடுதிக்குள் நேற்று இரவு 11.10 மணியளவில் கத்தியுடன் உள்ளே நுழைந்த மர்மநபர் மூன்றாவது மாடியில் உள்ள கிருதி குமாரி அறைக்குச் சென்றார். இதன்பின் கத்தியால் கிருதி குமாரியை தாக்கினார். அதன்பிறகு அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையின் தென்கிழக்கு பிரிவு டிசிபி சாரா பாத்திமா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, அறிமுகமான இளைஞரால் கிருதி குமாரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், தங்கும் விடுதி உரிமையாளர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியமாக இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாரா பாத்திமா தெரிவித்தார்.

இக்கொலை குறித்து கோரமங்களா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை மர்மநபர் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE