தஞ்சை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் உள்பட மூவர் உயிரிழப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே பேருந்தை முந்த முயன்ற போது இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன் மோனிஷ் (9). இந்நிலையில், இன்று காலை இரு சக்கர வாகனத்தில் ராதிகா தனது மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு பரவாக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

அதன் பின்னால் சென்று கொண்டு இருந்த ராதிகா, திடீரென பேருந்தை முந்த முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த இன்னொரு இருசக்கர வாகனத்தில் ராதிகாவின் இருசக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியதில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு பகுதியை ஆனந்த் மகன் விக்னேஷும்(18) பலியானார்.

இது குறித்து தகவலறிந்த மதுக்கூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த மூவரின் உடலையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த விக்னேஷ் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE