தாய், தங்கையை வெட்டி விட்டு தற்கொலைக்கு முயற்சி: மதுபோதையில் பெயிண்டர் வெறிச்செயல்

By பெ.ஜேம்ஸ் குமார்

சென்னை: பல்லாவரம் அருகே பொழிச்சலூரில், தாய், தங்கையை அரிவாளால் வெட்டி விட்டு, தனக்குத் தானே வெட்டிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மல்லிமா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சாந்தி (70). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டடார். இவர் தனது மகன் ராஜன் (38), மகள் பாக்கியலட்சுமி (27) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மகன், மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ராஜன் அதே பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

சாந்தி தனது மாற்றுத்திறனாளி மகள் பாக்கியலட்சுமியை கவனித்து வந்தார். ராஜன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது தாயிடமும், தங்கையிடமும் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவும் அது போலவே மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜனை, தாய் சாந்தி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜன், வீட்டின் சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து தனது தாய் என்றும் பாராமல் சாந்தியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சாந்திக்கு தலை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தங்கை பாக்கியலட்சுமியையும் சாரமாரியாக வெட்டியுள்ளார் ராஜன். இதனால் இரு பெண்களும் வலியில் அலறித்துடித்துள்ளனர். பின்னர் ராஜன், தாயையும் தங்கையையும் வெட்டிய அதே அரிவாளால் தனது தலையில் தானே வெட்டிக்கொண்டுள்ளார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, ரத்தவெள்ளத்தில் இருந்த மூவரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE