தண்டையார்பேட்டையில் மது அருந்தியபோது தகராறு: ஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம்

By மு.வேல்சங்கர்

சென்னை: தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே மது அருந்தியபோது, இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், இளைஞர் கொலை செய்யப்பட்டார், மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கொருக்குப்பேட்டை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த ராஜன் மகன் அலெக்ஸ்பாபு (22). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் நாய் பிடிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரது பெரியப்பா மகன் கொருக்குபேட்டை கஸ்தூரிபாய் நகர் கார்னேசன் நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (37). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு, தண்டையார்பேட்டை ரயில்வே தண்டவாளம் (சரக்கு ரயில் செல்லும் தண்டவாளம்) அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதே இடத்தில் இரண்டு நபர்கள் மதுபோதையில் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர், அவர்களை மோகன்ராஜ் எச்சரித்துள்ளார். அதற்கு அவர்கள் ஒருமையில் மோகன்ராஜை திட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களை அலெக்ஸ்பாபு தட்டிக்கேட்டபோது, இரு தரப்புக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் அந்த நபர்கள் கலைந்து சென்றனர்.

இதன்பிறகு, நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து அலெக்ஸ்பாபு மற்றும் மோகன்ராஜை அரிவாளால் வெட்டித் தாக்கிவிட்டு தப்பினர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அலெக்ஸ்பாபு உயிரிழந்து விட்டார். மோகன்ராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அலெக்‌ஷ்ஸ்பாபு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE