சென்னை | ரயிலில் 12 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

By KU BUREAU

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் வந்தது.

இந்த ரயிலிலிருந்து இறங்கிய பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தனர். இருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைப் பிடித்து, அவர்களின் பைகளை சோதித்தபோது, 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2.40 லட்சம் ஆகும்.

இதையடுத்து, அவர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். அதில், அவர்கள் சத்தீஸ்கரை சேர்ந்த அசோக்குமார் ரோஹித்தாஸ்(28), மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நயீம்(25) ஆகியோர் என்பதும், சத்தீஸ்கரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும், கேரளாவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சென்ட்ரலுக்கு வியாழக்கிழமை காலை வந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களும் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE