நடுரோட்டில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை : 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

By KU BUREAU

தஞ்சை அடுத்த களிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (27). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதா கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சின்னா என்கிற பிரின்ஸ் லாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீராம் முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளிவந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் திடீரென அலறி அடித்தபடி தாவி குதித்து சாலையில் இறங்கி ஓடினார். அவ்வழியாக சென்றவர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த போதே, 6 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீராமை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீஸார் ஸ்ரீராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பரவலாக பழிக்கு பழியாக படுகொலைகள் நடந்து வரும் சூழலில், மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE