விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, நாம் தமிழர் கட்சியினர் மோதல்!

By எஸ்.நீலவண்ணன்

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி நாதக வேட்பாளர் அபிநயா, வாக்கு சேகரித்தார்.


அப்போது எதிர் திசையில் ஏராளமான பெண்களுடன் வாக்குச் சேகரித்துக் கொண்டு வந்த திமுகவினரையும், அவர்களுடன் சென்ற பெண்களையும் பார்த்து அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். “ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் 500, 1000 பணத்திற்காக ஏன் இப்படி வந்து தெருவில் நிற்கிறீர்கள்? உங்களை எல்லாம் பார்த்தால் அறியாமையில் நின்று கொண்டிருப்பதாக தான் தெரிகிறது. கள்ளச்சாராய சாவிற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவினருடன் சென்றால் அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு தான் வந்து சேரும். போடுங்கம்மா ஓட்டு சாராய ஆலையை பார்த்து, போடுங்கம்மா ஓட்டு கள்ளச்சாராயத்தை பார்த்து, போடுங்கம்மா ஓட்டு தாலி அறுக்கற கும்பலை பார்த்து” என்றார்.


தொடர்ந்து அபிநயா விமர்சனங்களை முன்வைத்து வருவதால் திமுகவினர் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை தொரவி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதற்காக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பிரச்சாரம் செய்தபடி வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், வழக்கம் போல திமுகவினரை பார்த்ததும் திமுகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர்.


இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அப்போது திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி இருத்தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து இரு தரப்பும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மோதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE