ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (54). சென்னை, பெரம்பூரில் வசித்து வந்த இவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், அவரது சடலம் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட உள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் 8 பேர் போலீஸில் சரணடைந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE