திருப்பூர் - வெள்ளகோவில் அருகே வீட்டில் சாராயம் தயாரித்த 4 பேர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே வீட்டில் சாராயம் தயாரித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், 60 லிட்டர் ஊறல் மற்றும் 7 லிட்டர் சாராயத்தை போலீஸார் இன்று (ஜூலை 4) பறிமுதல் செய்தனர்.

வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சாராய நடவடிக்கைகள் குறித்து போலீஸார் கடந்த சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் சாராயம் காய்ச்சப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால் மேட்டுப்புதுார், சிபி நகரை சேர்ந்த மனோஜ் (30) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.

மனோஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குட்டி முருகன் (44), செல்வராஜ் (53) மற்றும் அருண்குமார் (35) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மனோஜ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 லிட்டர் கள்ளச்சாராயம், 60 லிட்டர் சாராய ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாராயம் தயாரித்து நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்துள்ளது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE