ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.94 லட்சம் பறிமுதல்...விழுப்புரம் இளைஞரிடம் ஆர்பிஎப் விசாரணை!

By காமதேனு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எவ்வித ஆவணமும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 94.23 லட்சம் ரொக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எழும்பூரில் நின்றுகொண்டிருந்த பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிலேஷ் என்பவர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கையிலிருந்த பைகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அவரிடமிருந்து 94 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் அளவிற்குப் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினரின் முதல்கட்ட விசாரணையில், தங்க நகைகள் வாங்குவதற்காக சென்னைக்குப் பணத்தைக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE