கள்ளச்சாராயம், போலி மது தயாரித்து விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

By செ.ஞானபிரகாஷ்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம், போலி மது தயாரித்து விற்ற புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உட்பட ஐவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஐந்து நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை அடுத்து போலீஸார் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், தகரை கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (35) மற்றும் சங்கராபுரம் வட்டம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் (39) ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 285 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

கடந்த 30-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே புதுச்சேரியைச் சேர்ந்த அண்ணாதுரை (46), சக்திவேல் (42), குமார் (@) சொட்டைகுமார் (55) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக போலியாக தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்ய கடத்தி வரும்போது உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யபட்டனர்.

மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்தியது மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர்கள் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இந்த ஐந்து நபர்களையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஐந்து பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE