சகோதரி வீட்டில் மகளை விட்டுச் சென்ற தந்தை: 4-வது மாடியில் விளையாடியபோது நடந்த விபரீதம்

By காமதேனு

குடியிருப்பு வளாகத்தில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்த நான்கரை வயது குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெசன்ட் சாலையில் வசித்து வரும் ராஜா - தேன்மொழி தம்பதியின் நான்கரை வயது குழந்தை கோபிகா. நேற்று ராஜா கோபிகாவை தனது சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஐயப்பன் தெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். நான்காவது மாடியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறாள்.

அப்போது ராஜாவின் சகோதரி கதவை மூடி வைத்துவிட்டு குளிக்க சென்றிருக்கிறார். அறையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பால்கனியின் கதவைத்திறந்து வெளியில் சென்றுள்ளது. அங்குள்ள கை பிடிக்கும் கம்பியில் ஏற முயற்சித்தபோது தவறி கீழே விழுந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE