`59 வங்கிக் கணக்குகள் முடக்கம்; அடுத்து பெற்றோர்களின் கணக்குத்தான்: அதிரடி காட்டும் கன்னியாகுமரி எஸ்பி

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாந்தின் பரிந்துரையின் அடிப்படையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 59 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, குமரி மாவட்டத்தில் கடந்த ஒருமாதத்தில் மட்டும், கஞ்சா விற்பனை செய்தவர்களின் 91 வங்கிக் கணக்குகள் முடக்க பரிந்துரை செய்யப்பட்டு, 59 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் உறவினர்களின் வங்கிக் கணக்குகள் கஞ்சா விற்பனைக்கு பயன்பட்டு இருந்தால் அந்த கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்கள் அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி கஞ்சா வாங்கவோ, விற்கவோ பயன்படுத்துவது பற்றித் தெரியவந்தால் அந்த வங்கிக் கணக்கினையும் முடக்க மாவட்டக் காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்படும். மேலும் கஞ்சா விற்பனை செய்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி இருந்தாலோ அதனையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE