நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி வீட்டில் திடீர் சோதனை: காரணம் என்ன?

By காமதேனு

நாகர்கோவிலில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி வீட்டில் போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையிலான போலீஸார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

கடந்த 21-ம் தேதி காலையில் குமரிமாவட்டம், பனக்காளுமுக்கு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இரணியல் அருகே, நாகர்கோவில் நோக்கி டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்த சிலர் அவரை வழிமறித்து மிகக்கொடூரமாகத் தாக்கினர். ராதாகிருஷ்ணனின் பைக்கில் அவரது மனைவியும் இருந்தார். இதில் தாக்குதலுக்கு உள்ளான ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சில பயங்கரவாதிகள் அரங்கேற்றியதாக பாஜக போராட்டக் களத்திற்கு வந்தது. பயங்கரவாதிகளின் புகலிடமாக குமரி மாவட்டம் மாறிவருவதாக போஸ்டர் ஒட்டியதோடு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது. இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலோடு, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் நாகர்கோவில், இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே இரணியல் தாக்குதல் சம்பவத்தை விசாரித்துவரும் குளச்சல் டி.எஸ்.பி தங்கராமனுக்கு சாகுல் ஹமீது வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று, அதிரடியாக சாகுல் ஹமீது வீட்டிற்குள் நுழைந்த போலீஸார், அங்கு ஆயுதங்கள் இருக்கிறதா? என்பது குறித்து அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE