சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் நேற்று கல்லூரி முடிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்துகொண்டிருந்தனர். அப்போது இருதரப்பு மாணவிகளுக்கிடையில் பஸ் நிறுத்தத்திலேயே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த சக கல்லூரி மாணவ - மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவிகளுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடிச் சண்டை போட்டது புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் போட்ட குடுமிப்பிடிச்சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.