கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனோடு தடபுடல் விருந்து: புகைப்படத்தால் சிக்கிய இன்ஸ்பெக்டர்!

By காமதேனு

கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனோடு காவல்துறை அதிகாரி பிரியாணி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா இலங்கைக்கு விசைப்படகு வழியாக நாகப்பட்டினத்திலிருந்து கடத்தப்பட உள்ளதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் துறைமுகத்தில் சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீஸார், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பொட்டலங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தல் தொடர்பாக அக்கரைப்பேட்டை விசைப்படகு உரிமையாளர் மோகன், சிலம்புசெல்வன் , நிவாஸ், ஜெகதீசன், சரவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட சிலம்புசெல்வன் சிறையில் உள்ள நிலையில் அவரது வீட்டில் நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா கடத்தல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவன் சிலம்புசெல்வன் மற்றும் அவரது நண்பர்களோடு நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி சீருடையோடு ஹோட்டல் ஒன்றில் பிரியாணி விருந்தில் பங்கேற்ற புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளோடு கொட்டமடிக்கும் காவல் ஆய்வாளரின் இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE