காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By காமதேனு

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேகமான முறையில் மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த 18-ம் நள்ளிரவு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தபோது விக்கேனஷ் திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எழும்பூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவால் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் விக்னேஷின் உடல் அண்ணன் வினோத்திடம் ஒப்படைக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த சந்தேக மரணம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, விக்னேஷை விசாரித்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை செயலக காலனி காவல் நிலைய காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்காவல்படையை சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கின் மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE