`நான்தான் மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினேன்'- சிக்கியதால் ராஜினாமா செய்த ஆசிரியர்

By கே.எஸ்.கிருத்திக்

ராஜபாளையம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் வேலையை ராஜினாமா செய்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் தங்கராஜ் (35). இவர் தன்னிடம் பிளஸ் 2 படித்த மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியரின் பெயர் அதில் இருந்ததால், அந்த எஸ்எம்எஸ் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் விசாரணை நடத்தியது. மேலும் இதுகுறித்து அவர்கள் போலீஸிலும் புகார் செய்தனர்.

விசாரணையில், ஆசிரியர் தங்கராஜ் அனுப்பிய அந்த ஆபாச எஸ்எம்எஸ்-ஐ, அந்த மாணவியின் தங்கை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து உறவினரான ஆகாஷ் என்பவருக்கு அனுப்பி உள்ளார். அவர் வேறு சிலருக்கு அதை அனுப்ப, கடைசியில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று அது வைரலாகியிருக்கிறது.

பள்ளித் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் இரு ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் தான்தான் அந்த எஸ்எம்எஸ்-ஐ அனுப்பினேன் என்று ஆசிரியர் தங்கராஜ் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பின் பேரில் அவர், வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். இருப்பினும் இதுகுறித்து தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE