புதுக்கோட்டை அருகே, மனைவியைக் கொலை வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). இவருக்கு 3 மனைவிகளுடன் மகன், மகள்கள் மொத்தம் 11 பேர் உள்ளனர். கடந்த 2019-ல் தனது 3-வது மனைவியின் மகளான 17 வயது சிறுமியை முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தனது தாயார் பானுமதியிடம் (50) சிறுமி கூறியுள்ளார்.
தகவல் அறிந்த, பானுமதி முருகேசனைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அன்றைய தினம் மாலையில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்ற பானுமதியை தென்னதிரையன்பட்டி யூகலிப்டஸ் காட்டில் வைத்துக் கொலை செய்து சடலத்தை வீசிச் சென்றார்.
இதையடுத்து, புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் முருகேசன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்குத் தூக்குத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என 2021 மே 6-ம் தேதி தீர்ப்பளித்தது.
முருகேசனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு ஒப்புதல் கோரி புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் சார்பிலும், தண்டனையை ரத்து செய்யக்கோரி முருகேசன் தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மனைவி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது.